Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்புள்ள நெஞ்சார நேசிக்கப்பட்ட மணவாட்டியே,
நேரம் கடந்துவிட்டது. காலம் சமீபித்துவிட்டது. தீர்மானமானது எடுக்கப்பட வேண்டும். தேவன் தம்முடைய பிள்ளைகளை எச்சரித்துக் கொண்டிருக்கிறார். நம்முடைய தேவனாகிய கர்த்தர், தம்முடைய வார்த்தையினாலும், தம்முடைய ஆவியினாலும், தம்முடைய சத்தியம் என்னவென்று நமக்கு அறிவித்து, அதை ரூபகாரப்படுத்தியிருக்கிறார். பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும், உம்முடைய வசனமே சத்தியம்.
இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அவர் இன்றைக்கு மணவாட்டிக்கு முழுமையாக ரூபகாரப்படுத்தியிருக்கிறார். இந்த நேரத்தின் செய்தியும், செய்தியாளனும் ஒருவரே என்பதை அவர் நமக்குக் காண்பித்து வெளிப்படுத்தியுள்ளார். வார்த்தையில் மறைக்கப்பட்டிருந்த தம்முடைய எல்லா இரகசியங்களையும் அவர் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். தம்முடைய பரிசுத்த ஆவியினால் அதை நமக்கு நிரூபித்துள்ளார். நம்முடைய மனதிலோ, இருதயத்திலோ, அல்லது ஆத்துமாவிலோ எந்தக் கேள்வியும் இல்லை. ஒலிநாடாக்களில் உள்ள அவருடைய சத்தம் அவருடைய மணவாட்டிக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகவே உள்ளது.
தேவன் தம்மிடம் வருவதற்கு எப்போதும் பல வழிகளை அனுமதித்திருக்கிறார். அவர் தம்முடைய பரிபூரண சித்தத்திற்காகத் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தை அமைத்துக்கொள்கிறார். அவர் தம்முடைய பிள்ளைகளுக்காக எப்போதும் ஒரு பரிபூரண சித்தத்தையும், பரிபூரண வழியையும் அருளியிருக்கிறார். பலர் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு மாறாக, அவருக்கு ஊழியம் செய்வதன் மூலம் வேறு வழியில் வர முயற்சிக்கிறார்கள். அது அவருடைய பரிபூரண சித்தம் போலத் தோன்றலாம், ஆனால் அது அவருடைய வார்த்தையின்படி இல்லை.
தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வந்த, புதிதாக அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு பெரிய மனிதர் கூட, தேவனுக்காக ஏதாவது செய்ய ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார், அதைச் செய்ய விரும்பினார்; ஆனால் அவர் பெற்ற வெளிப்பாடு தவறானதாயிருந்தது.
நம்மில் ஒவ்வொருவரும் அவர் அருளின பரிபூரண வழியைக் கண்டறிய வேண்டும். தேவனுடைய பிரசன்னத்திலிருந்து ஒரு வெளிப்பாட்டுடன் புதிதாக வந்த, உண்மையாகவே அபிஷேகம் செய்யப்பட்ட ஒருவர் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறார் என்றால், நாமும் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் எப்படி அறிந்துகொள்வது?
நிச்சயமாக அறிந்துகொள்ள ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது, தேவன் அந்த வழியைத் தம்முடைய மணவாட்டிக்காக அருளியுள்ளார்.
தேவனுடைய சத்தமே இந்தச் சபைக்கும், ஒலிநாடாக்களில் உள்ள உங்கள் அனைவருக்கும், உலகின் பிற பகுதிகளில் உள்ள இணைப்புகளில் உள்ள மக்களுக்கும், அப்போதும் இப்போதும் சொல்லியிருக்கிறது. அவர் கூறிக் கொண்டிருந்ததை மிகவும் கவனமாகக் கேட்கும்படியும், நாம் தோல்வியடையக் கூடாது என்றும் அவர் நமக்குக் கூறினார்.
ஆகையால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் இவ்வாறு கூறுகிறேன்: இதனுடன் எதையும் கூட்டாதீர்கள், எதையும் எடுத்துப் போடாதீர்கள், உங்கள் சொந்தக் கருத்துக்களை இதனுள் புகுத்தாதீர்கள்; அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதை மட்டுமே நீங்கள் சொல்லுங்கள்; தேவனாகிய கர்த்தர் செய்யும்படி கட்டளையிட்டதை அப்படியே செய்யுங்கள்; இதனுடன் எதையும் கூட்டாதீர்கள்!
பிரசங்கிமார்கள் வார்த்தையைப் பிரசங்கிக்கக்கூடாது என்றோ, போதகர்கள் வார்த்தையைப் போதிக்கக்கூடாது என்றோ, அல்லது மேய்ப்பர்கள் அல்லது தீர்க்கதரிசிகள் தாங்கள் அழைக்கப்பட்ட ஊழியத்தைச் செய்யக்கூடாது என்றோ அவர் கூறவில்லை; அவ்வாறு செய்வது தவறு என்றும் அவர் கருதவில்லை. அவர்கள் அதைச் செய்தே ஆகவேண்டும்; நானும் அதைச் செய்தே ஆகவேண்டும். அவ்வாறு செய்வதற்கென்றே நாம் அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டிருக்கிறோம். நாம் மக்களுக்கு இந்தச் செய்தியையும், இந்தச் செய்தியாளரையும் சுட்டிக்காட்டி, மேற்கோள் காட்ட வேண்டும், ஏனெனில், இதுவே நம்முடைய காலத்திற்கான வார்த்தையாகும்.
ஆனால், நாம் அனைவரும் அபிஷேகம் பெற்றவர்களாகவும், அதுவும் உண்மையான அபிஷேகம் பெற்றவர்களாகவும், அவருடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாகவும், மாசுபடாத வெளிப்பாடுகளைப் பெற்றவர்களாகவும் இருந்தபோதிலும், அவருடைய சித்தத்திற்குப் புறம்பாகச் செயல்படக்கூடும் என்று அவர் நமக்குத் தெளிவாகக் கூறுகிறார். நம்முடைய நாளில், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது தேவனுடைய சத்தம்தான் என்பதையும், அதுவும் தேவன்தாமே நேரடியாகப் பேசும் சத்தம்தான் என்பதையும், நிச்சயமாக அறிந்துகொள்வதற்கு அவர் ஒரு பூரணமான வழியை அருளியிருக்கிறார். அது மாத்திரமே பூரணமான வழியாகும்.
ஊழியமானது இந்தச் செய்தியை மேற்கோள் காட்டிப் பிரசங்கிப்பதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது; அந்த ஒலிநாடாக்கள் வாயிலாக ஒலிக்கும் தேவனுடைய சத்தத்தையே நாம் மக்களுக்குக் கேட்கச் செய்ய வேண்டும். தேவனுடைய சத்தத்தைத் தங்கள் காதுகளால் கேட்பதைவிடச் சிறந்த மகத்தான அபிஷேகம் வேறெதுவும் இல்லை. நாம் கேட்டுக் கொண்டிருப்பது சரியாக தேவன் கூறிய வார்த்தைகளேதான் என்பதை சற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்துகொள்வதற்கு வேறு எந்த வழியும் இல்லை.
உலக வரலாற்றின் வேறெந்தக் காலத்திலும் இல்லாத வகையில், நம்முடைய இந்தக் காலத்தில் தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார். நீங்கள் அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டியாக இருப்பீர்களேயானால், இந்த வழியைத் தவறவிடுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும். இது தேவனுடைய சத்தம் தாமே தம்முடைய சபையினிடத்தில் நேரடியாக பேசுவதாக இருக்கும்படிக்கு அக்கினி ஸ்ம்பத்தினால் தாமே ரூபகாரப்படுத்தி, வெளிப்படுத்தியிருக்கிறார்.
பல்லாயிரம் ஆண்டுகளாக, தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய சத்தத்தைத் தாங்களே கேட்க ஏங்கித் தவித்திருக்கிறார்கள். இயேசு மலையில் ஆயிரக்கணக்கானோருக்குப் பிரசங்கம் செய்த அந்த நாளில், தாங்களும் அங்கே இருந்திருக்க வேண்டும் என்று அவர்கள் எவ்வளவு ஆசைப்பட்டார்கள். எப்படியாய் அவர் தமது வார்த்தையை அன்போடும் இரக்கத்தோடும் பேசியதைக் கேட்கவே. எப்படியாய் அவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்ததைக் கேட்கவே. அது அவர்களுடைய இருதயங்களில் பேசி, அவர்களை உற்சாகப்படுத்தியதைக் கேட்கவே.
நாம் இப்போது உயிரோடு இருக்கிறோம், தேவனுடைய பிரசன்னத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
மிக விரைவில் ஒரு நாள் நாம் மீண்டும் இந்த வகையான வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டோம். நாம் ஒரு அழியாத ஜீவனாகத் திரும்புவோம். பாவம் ஒழிக்கப்படும். சாத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குக் கட்டப்படுவான், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுத்திருந்த இந்தப் பூமியில் நாம் ஜீவிப்போம்.
நாம் 100% பூரணமானவர்கள். நம் வாழ்வில் நாம் இவ்வளவு மகிழ்ச்சியாகவோ அல்லது சந்தேகத்திற்கு இடமின்றியோ இருந்ததில்லை. நாம் அவருடனும் அவருடைய வார்த்தையுடனும் ஒன்றானவர்கள். நாமே அவருடைய வார்த்தை. அவருடைய சத்தத்தோடும், அவருடைய வார்த்தையோடும் நிலைத்திருப்பதன் மூலம், நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம். நம்மைத் தம்முடன் அழைத்துச் செல்ல அவர் எந்த நாளிலும் திரும்பி வருவார்.
கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி!
சத்தியம் என்னவென்று உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு அறிவித்திருக்கிறார். உங்கள் தேவனாகிய கர்த்தர், தம்முடைய வார்த்தையினாலும் தம்முடைய ஆவியினாலும் சத்தியத்தை ரூபகாரப்படுத்தியிருக்கிறார், “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” மேலும், ஆவியானவர், “ஆவியிலும் சத்தியத்திலும் தம்மை ஆராதிப்பவர்களை தேவன் தேடுகிறார்.” “உம்முடைய வசனமே சத்தியம்.” இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்பதை அவர் முழுமையாக ரூபகாரப்படுத்தியிருக்கிறார். அவர் உங்களுக்கு சாயங்கால வித்துக்களை காண்பித்திருக்கிறார். அவர் அதை உங்களுக்கு வார்த்தையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் அதை உங்களுக்கு தம்முடைய ஆவியினால் நிரூபித்திருக்கிறார்.
தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் 65-0718M என்ற செய்தியை அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் நமக்கு கொண்டு வந்து அவருடைய சத்தத்தின் மூலமாகப் பேசுவதை கேட்கும்படிக்கு ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, உலகம் முழுவதிலுமிருந்து நாங்கள் ஒன்றுகூடும்போது, அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியாக நீங்கள் ஒவ்வொருவரும் வந்து சேர்ந்து கொள்ளுமாறு நான் என் முழு இருதயத்தோடும் அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்:
உபாகமம் 4:1-4 / 4:25-26
1 நாளாகமம் 13
1 நாளாகமம் 15:15
சங்கீதம் 22
பரி.மாற்கு 7:7
யோவேல் 2:28
ஆமோஸ் 3:7
மல்கியா 3
பரி.மத்தேயு 11:1-15
1 கொரிந்தியர் 13:1