ஞாயிறு
26 மார்ச் 2023
65-1125
கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு

அன்புள்ள தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டியே,

கர்த்தராகிய இயேசு இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுடைய வீட்டிற்கு வந்து, உங்களுடைய ஓய்விருக்கையில் அமர்ந்து, உங்களுடைய கண்களைப் பார்த்து, உங்களிடம் நேரடியாகப் பேசுவதற்கு நீங்கள் என்னக் கொடுப்பீர்கள்

உங்களால் பேச முடியாது. நீங்கள் பேச விரும்பமாட்டீர்கள். நீங்கள் செய்ய விரும்புவதெல்லாம் அவரைப் பார்த்து அழுவதுதான். நீங்கள் உங்களுடைய வாயைத் திறக்கக்கூட பயப்படுவீர்கள். உங்களால் என்னக் கூற முடியும்? கர்த்தாவே, நீர் இங்கே என்னுடைய வீட்டில் இருக்க நான் மிகவும் அப்பாத்திரனாயிருக்கிறேன் என்றே, நீங்கள் உங்களுடைய சிந்தையில் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். நான் தாழ்ந்தவர்களிலேயே மிகவும் தாழ்ந்தவனாயிருக்கிறேன். கர்த்தாவே நான் அநேக முறை உம்மிடத்தில் தவறியிருக்கிறேன், ஆனாலும் கர்த்தாவே, நான் உம்மை மிகவும் நேசிக்கிறேன்.

நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் சரியாக அறிந்திருக்கிறார் என்பதையும், அவருக்கு மறைவானது எதுவுமில்லை என்றும், அப்பொழுது நீங்கள் உங்களுடைய இருதயத்தில் தெளிவாக உணர்ந்துகொள்வீர்கள். என் இருதயத்தின் இரகசியங்களை அவர் அறிந்திருக்கிறார்.

அவருடைய விலையேறப்பெற்ற கண்களை நீங்கள் பார்க்கும்போது, அத்தகைய அன்பையும் இரக்கத்தையும் நீங்கள் காண்பீர்கள். அவர் வாய் திறவாமலே உங்களிடம் பேசிக் கொண்டிருப்பார். அவர் உண்மையாகவே இங்கே, என்னுடைய வீட்டில், என்னுடன் இருக்கிறார் என்று, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

அவர் உங்களிடம் ஏதோ சொல்லப் போகிறார் என்பதை நீங்கள் கண்டவுடனே, உங்களுடைய இருதயமும் கூட இன்னும் அதிகமாக துடிக்கத் தொடங்கும். உடனே, நீங்கள் இதுவரை கேட்டிராத இனிமையான சத்தம், “என்னுடைய அன்பான இனிய இருதயமே, கவலைப்படாதே, உன்னுடைய பெயர் என்னுடைய ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் உள்ளது. உன்னுடைய இயற்கை இணைப்பையொட்டிய பழைய புத்தகத்தில் அல்ல, ஆனால் என்னுடைய புதிய மணவாட்டிப் புத்தகத்திலே. இது என்னுடனான உன்னுடைய விவாகச் சான்றிதழ்.

என் அன்பே, உன்னுடைய பாவங்கள் மற்றும் தோல்விகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டிருக்கிறது மட்டுமின்றி, நீ எனக்கு நீதிமானாக்கப்பட்டிருக்கிறாய். என்னுடைய பார்வையில், நீ ஒருபோதும் எந்த தவறையும் செய்யவேயில்லை.

நீ என்னுடைய விலையேறப்பெற்ற, கற்புள்ள, பாவமற்ற மகனாயும் மகளாயும் இருக்கிறாய். என்னுடைய சொந்த இரத்தத்தின் தண்ணீரால் கழுவப்பட்டிருக்கிற என்னுடைய கலப்படமற்ற மணவாட்டியாய்; நீ சுத்தமாக நின்றுகொண்டிருக்கிறாய்.

ஒரு சந்திரனோ, நட்சத்திரங்களோ அல்லது ஒரு மூலக்கூறோ இருப்பதற்கு முன்பே, நீ என்னுடைய மகனாய், மகளாய் இருந்தாய். நீ ஆரம்பத்தில் என்னில் இருந்த தன்மைகளின் சரீரப்பிரகாரமான வெளிப்படுத்தலாய் இருக்கிறாய்.

நீங்கள் என்னுடைய தன்மைகளின், என்னுடைய சிந்தனைகளின் வெளிப்படுத்துதலாய் இருக்கிறபடியால் உங்களுடைய ஆவிக்குரிய மரபணுக்கள் எனக்குள் இருந்தன. உலகத் தோற்றத்திற்கு முன்பே நீங்கள் எனக்குள் இருந்தீர்கள்.

நீங்கள் என்னுடைய ஆவிக்குரிய மணவாட்டியாய் குமாரனின் பிரசன்னத்தில் இருந்து, என்னுடைய வார்த்தையை கேட்பதன் மூலம் முதிர்ச்சியடைகிறீர்கள். இப்பொழுது நீங்கள் ஒரு எழுப்புதலை பெற்றுக்கொள்ளத் துவங்கி, திரும்பி வந்து, என்னுடைய வார்த்தையோடு உங்களை சரிபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டியான மணவாட்டியாய் இருக்கிறீர்கள்.

நீங்கள் இப்பொழுது என்னுடன் ஒரு ஆவிக்குரிய இணைப்பில் இருந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய மாம்சம் வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக் கொண்டிருக்கிறது; வெளிப்படுத்தப்பட்டு ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாளில் என்ன சம்பவிக்கும் என்று நான் உங்களிடத்தில் சொன்னேனோ, அது நாளுக்கு நாள், அப்படியே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. வார்த்தையே வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது.

நீ இந்த கடைசி நாளுக்கான உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுள்ளாய்; இந்த செய்தியின் மூலம் என்னுடைய மணவாட்டியை ஒன்றுசேர்தல். வேறு எந்தக் காலத்திலும் நான் அதை வாக்களிக்கவேயில்லை. நான் அதை உனக்கு இந்தக் காலத்தில் வாக்களிக்கிறேன்: மல்கியா 4, லூக்கா 17:30, பரிசுத்த யோவான் 14:12, யோவேல் 2:38.

இந்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நன்றி தெரிவிக்கும் விருந்து ஒன்றைக் கொண்டாடப்போகிறோம், அப்பொழுது நான் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் சொல்வேன். நான் உங்களுடன் பல மணிநேரம் செலவழித்து, ஐக்கியங்கொண்டு, என்னுடைய வார்த்தையின் பேரில் விருந்துண்பேன். என்னுடைய வார்த்தையோடும், என்னுடைய தீர்க்கதரிசியோடும், என்னுடைய சத்தத்தோடும், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் தரித்திருப்பதனால், நீங்கள் என்னுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நான் வாசலண்டையிலே நின்று, தட்டிக் கொண்டிருக்கிறேன் என்று, நான் என்னுடைய வார்த்தையில் அவர்களிடம் சொன்னேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். அநேகர் செவிகொடுத்து தங்களுடைய வாசலைத் திறக்கமாட்டார்கள், ஆனால் வெளிப்பாட்டினால், நீங்கள் உங்களுடைய வாசலைத் திறந்து என்னை உள்ளே வரவேற்றிருக்கிறீர்கள்.

அவர்கள் தங்களுடைய சபைகளில் என்னுடைய சத்தத்தை தொனிக்கச் செய்ய உடன்படுகிறதில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியானவர் தங்களுடைய மனதை வார்த்தையால் ஆராய அனுமதித்தால், அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். கிறிஸ்து, அபிஷேகிக்கப்பட்ட வார்த்தையானது, உங்களுடைய சொந்த மனசாட்சியை ஆராயட்டும். அது உண்மையா அல்லது இல்லையா என்று பார்க்கும்படி, அவர் உங்களுக்குள் வரட்டும்.

உங்களை ஒன்று சேர்ப்பது ஒரு ஸ்தாபனமாக இருக்காது என்று நான் உங்களுக்கு சொன்னேன், வேதாகமத்தில் உள்ள ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளின் பேரில் கூட அவர்களால் ஒத்துப்போக முடியாது. அது ஒரு மனிதக் குழுவாக இருக்கும் என்று நான் எப்போதாவது உங்களிடத்தில் சொன்னேனா? இல்லையே! இது ஒரு மனிதனின் செய்தி என்றே நான் உங்களிடத்தில் சொன்னேன்; நீங்கள் கேட்டு கீழ்ப்படிந்தீர்கள்.

அவர்கள் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய மூல திட்டத்தைக் கேட்டு ஏற்றுக்கொள்ளாததால், நான் அவர்களுக்கு பிரசங்கிமார்களையும், போதகர்களையும், அப்போஸ்தலர்களையும், மேய்ப்பர்களையும் மற்றும் தீர்க்கதரிசிகளையும் அனுப்பினேன். ஆனால் என்னுடைய மூல மற்றும் பரிபூரண திட்டத்திற்கு, என்னுடைய பலமுள்ள தூதனிடத்திற்கு, திரும்பிச் செல்லும்படி சுட்டிக்காட்ட அவர்கள் அனுப்பப்பட்டனர். ஏனென்றால் அது உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் உள்ளது.

அவர்கள் அபிஷேகிக்கப்பட்டவர்கள், ஆனால் உங்களை வழிநடத்த எனக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர் மாத்திரமே இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே தீர்க்கதரிசியாயிருக்கிறார். அவர் மூலமாக உரைக்கப்பட்ட என்னுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்றும், அவர் கூறின எந்த காரியத்தோடு எதையும் கூட்டவோ அல்லது எடுத்துப் போடுவோ வேண்டாம் என்றும், ஒலிநாடாக்களில் அவர் அவைகளை கூறினவாறே அப்படியே கூறுங்கள் என்றும், நான் உங்களுக்கு அநேக முறை சொல்லியிருக்கவில்லையா? அதுவே தீர்க்கதரிசி, பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துகிறதாகும்.

உங்களை என்னுடைய மணவாட்டியாய் இருக்கும்படி அழைக்க நான் அனுப்பின ஒருவராய் அவர் இருக்கிறார். அவரே உங்களை என்னிடத்தில் அறிமுகப்படுத்துகிற ஒருவராய் இருக்கிறார். என்னுடைய மணவாட்டியான, உங்களைப் பற்றிய முன்னோட்டத்தை அவருக்குக் காண்பித்த போது நான் உடன் நின்றவர் அவரே. சபைகளில், இவைகளை உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்க, இயேசுவாகிய நான் என்னுடைய தூதனை அனுப்பியிருக்கிறேன் என்று நான் சொன்னபோது, அவரைக் குறித்த எல்லாவற்றையும் வெளிப்பாடுகளில் நான் உங்களிடத்தில் சொன்னேன். இது நான் தான், நான் அவருடைய சரீரத்தையும், அவருடைய சத்தத்தையும் உங்களிடம் பேச பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்."

நாம் அவரோடு ஒன்றுகூடியிருப்பது என்னே ஒரு அற்புதமான நாள். நம்முடைய ஜீவியங்களில் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாகவோ அல்லது அதிக திருப்தியாகவோ இருந்ததில்லை. இதுதான் அதுவாகும். இதற்காகத்தான் நம்முடைய ஜீவிய காலமெல்லாம் நாம் காத்துக்கொண்டு வருகிறோம்.

நம்முடைய இருதயங்களிலோ அல்லது நம்முடைய சிந்தைகளிலோ சந்தேகத்தின் ஒரு நிழலும் இல்லை. ஏனென்றால், நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும், நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்று அவர் நமக்குச் சொல்லுகிறார். ஒரே ஒரு சத்தம் மாத்திரமே உங்களை ஒன்றிணைக்கும், உங்களை பரிபூரணப்படுத்தும் மற்றும் உங்களை ஒன்றாகக் கொண்டு வரும்…நான், நானே என்னுடைய தீர்க்கதரிசி மூலம் பேசுகிறேன். அவருடைய வார்த்தைகள் அல்ல, என் வார்த்தைகள். இதுவே என்னுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது.

மேஜையானது விரிக்கப்பட்டிருக்கிறது. இது முட்டைக்கோஸ், கிழுங்கு வகைகள் மற்றும் முள்ளங்கிகளால் நிறைந்ததுள்ளது…வார்த்தையின் மேல் வார்த்தை, வார்த்தையின் மேல். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் நன்றி தெரிவிக்கும் விருந்தினைக் கொண்டாடப்போகிறோம். மணவாட்டி தங்களுடைய மேஜைகளை சுற்றி ஒன்று கூடி அவர்களிடம் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்கப்போகிறபடியால், அது உலகத்தைச் சுற்றிலும் ஒரு யூபிலியாக இருக்கும். நம்முடைய வீடுகளும் சபைகளும் அவருடைய பிரசன்னத்தால் நிரப்பப்படும். நம்முடைய மகிமையான, அல்லேலூயாக்கள், கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதைத் தவிர நாம் பேசாமல் இருப்போம்.

அவர் நம்மை போஷிக்கிறபடியால், மணவாட்டியினுடைய குடும்ப நன்றி கூறும் கூடுகையின் ஒரு பாகமாக இருக்க வாருங்கள். ஞாயிற்றுக்கிழமை, சரியாக பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி நாங்கள் விருந்தினை துவங்கவுள்ளதால், தாமதமாக வரவேண்டாம். அவர் அங்கு இருப்பார், ஏனென்றால் அவர் அங்கிருப்பேன் என்று என்னிடம் கூறினார்.

நான் வருகிறேன், உங்களுடைய கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பைக் குறித்த 65-1125 எல்லாவற்றையும் நான் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருப்பேன்.

நான் உங்களை அங்கே மேஜையண்டையில் காண்பேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

மற்றொரு பெயரான: அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டி