
அன்புள்ள மேசியானிக்களே,
நாம் தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்; அவருடைய அதே ஆவியால், அதே கிரியைகளினால், அதே வல்லமையால், அதே அடையாளங்களால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறோம். அது கழுகிலிருந்து கழுகுக்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, சரீரப்பிரகாரமான, ஆவிக்குரியப் பிரகாரமான, அல்லது நமக்குத் தேவையாய் இருக்கிற எந்த தேவையானாலும், இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் நம்முடைய ஒவ்வொரு சரீரங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்ற வரையிலும் சென்றுள்ளது. அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை நமக்குள் ஜீவித்துக்கொண்டும், நமக்குள்ளே வாசம் செய்துகொண்டும் இருக்கிறது. நாம் தேவனுடைய மேசியானிக்களாய் இருக்கிறோம்.
ஒவ்வொரு வாரமும் இந்த செய்தியின் வெளிப்பாடு; நாம் யார், நாம் எங்கிருந்து வருகிறோம், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மேலும் மேலும் பெரிதாக்குகிறது. நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆச்சரியப்படுகிறோம், அது இதற்குமேல் எப்படி இன்னும் மகிமையாக இருக்க முடியும்? அது இதற்கு மேல் இன்னும் எப்படி தெளிவாக இருக்க முடியும்? ஆனால் நாம் கேட்கும் ஒவ்வொரு புதிய ஒலிநாடாவிலும், தேவன் நம்மிடத்தில் உதட்டிலிருந்து செவிக்குப் பேசி, அவருடைய வார்த்தையை நமக்கு இன்னும் அதிகமாக வெளிப்படுத்தி, நாம் யார் என்பதை, நமக்கு உறுதியளிக்கிறார்.
தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க வேண்டும் என்பதே எந்தவொரு விசுவாசியினுடைய இருதயத்திலும் உள்ள மிக மகத்தான வாஞ்சையாய் இருக்கிறது. நாம் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க ஒருபோதும் விரும்புகிறதில்லை. அவருக்குப் பிரியமில்லாத எந்தக் காரியத்தையாவது நாம் செய்துள்ளதாக உணர்ந்தால், நம்முடைய இருதயங்கள் உடைந்துபோய், நாம் நொறுங்கிவிடுகிறோம். தேவனுக்கு ஒரு பரிபூரண சித்தம் இருப்பதை நாம் அறிவோம், எனவே நாம் அவருடைய பரிபூரண சித்தத் திட்டத்தில் இருக்கவே விரும்புகிறோம்.
என்னுடைய ஜீவியத்தில், மணவாட்டியின் ஒவ்வொரு அங்கத்தினரும், சபை அங்கத்தினர் மற்றும் ஊழியர்கள் என இருவருமே செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம், இயங்கு பொத்தானை அழுத்துவது என்றே நான் கூறுவதன் மூலம் நான் ஒரு உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துள்ளேன். இது மாத்திரமே நீங்கள் கேட்க வேண்டிய மற்றும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்ப்படிய வேண்டிய நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தமாய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.
இது ஜனங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான தனிப்பட்ட சத்தம் என்பதால், ஊழியத்தில் மீண்டும் அவர்களுடைய பிரசங்க பீடத்தில் சகோதரன் பிரான்ஹாமுக்கு இடமளித்து, அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டியதாய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன் என்றே கூறியுள்ளேன்.
இதுவே அவருடைய திட்டமும், பரிபூரண சித்தமுமாயிருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கும் இந்த நிலைப்பாட்டை எடுத்ததற்காக என் வாழ்க்கையில் நான் அதிகமான விமர்சனங்களைப் பெற்றுள்ளேன். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, எபேசியர் 4-ன் ஐந்து வகையான ஊழியத்தை நான் நம்புகிறதில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இது பொய் என்பதை நான் பலமுறை, பலமுறை வெளிப்படுத்தியுள்ளேன். நான் அவ்வாறு ஒருபோதும் கூறினதுமில்லை, அதை எப்போதுமே அவ்வாறு நம்பினதுமில்லை. அனேகர் என்னுடைய வார்த்தைகளை திரித்து, நான் ஒருபோதும் கூறியிராத அல்லது விசுவாசிக்காத காரியங்களை ஜனங்களுக்கு சொல்லுகிறார்கள், ஆனாலும் அது எதிர்பார்க்கப்பட வேண்டியதாய் உள்ளது.
வேத வார்த்தையின் சத்தியம் என்ற ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் இந்த செய்தியை விசுவாசிப்பதாக உரிமை கூறினால், அப்பொழுது தீர்க்கதரிசி என்ன கூறினார் என்பதே தேவனுடைய வார்த்தையின் வியாக்கியானமாய் இருக்கிறபடியால், அதையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் மாத்திரமே அந்த வார்த்தையின் வியாக்கியானியாய் இருக்கிறார்.
நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் "யார் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டால், நீங்கள் ஒவ்வொருவரும், "ஆம், அதுவே என் இருதயத்தினுடைய வாஞ்சை" என்று கூறுவீர்கள். ஆகவே, தேவனுடைய பரிபூரண சித்தம் என்ன என்று தீர்க்கதரிசி கூறினதையே நாம் பார்க்க வேண்டும்.
குறிப்பு: ஒலிநாடாவில் உள்ள செய்தி உங்களுடைய முற்றிலுமானதல்லவென்றால், நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கவில்லையென்றால், இந்தக் கடிதத்தைப் படிப்பதை நிறுத்திவிடுங்கள். என்னைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு விசுவாசி அல்ல, எனவே இது உங்களுக்கானதல்ல. தேவன் ஒலிநாடாவில் என்ன கூறினார் என்பதோடு மாத்திரமே என்னால் தரித்திருக்க முடியும்.
அவர் என்னக் கூறினார் என்பதே நமக்கு வேண்டும்; சபை என்னக் கூறினது என்பதல்ல, வேதபண்டிதர் ஜோன்ஸ் என்னக் கூறினார், யாரோ ஒருவர் என்னக் கூறினார் என்பதல்ல. கர்த்தர் உரைக்கிறதாவது என்னக் கூறினது, வார்த்தை என்னக் கூறினது என்பதே நமக்கு வேண்டும்.
நாம் அவருடைய சித்தத்திற்கும், அவருடைய வார்த்தைக்கும் நம்மை கீழ்படியச் செய்ய வேண்டும். நாம் அதைக் கேள்வி கேட்கக்கூடாது. நாம் அதை விசுவாசிக்க வேண்டும். அதற்கு ஒரு சுற்று வழியை கண்டறிய முயற்சிக்காதீர்கள். அது இருக்கிற விதமாகவே அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.
அநேகர் சுற்றிச் சென்று வேறு வழியில் செல்ல விரும்புகிறார்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், ஆனால் நீங்கள் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்களேயன்றி, அவருடைய பரிபூரண, தெய்வீக சித்தத்தில் அல்ல. தேவன் உங்களை ஏதாவது செய்ய அனுமதிப்பார், அதைச் செய்வதில் உங்களை ஆசீர்வதிக்கவும் கூட செய்வார், ஆனால் அது இன்னமும் அவருடைய பரிபூரண சித்தம் அல்ல.
தேவன் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்க பூமிக்கு அவருடைய செய்தியாளனான ஏழாம் தூதனை அனுப்பினார். அது மனுஷகுமாரன் தம்மை மானிட சரீரத்தில் வெளிப்படுத்துவதாக இருந்தது என்று நாம் விசுவாசிக்கிறோம். இது அவருடைய மணவாட்டிக்காக பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட அதே தேவனுடைய சத்தமாய் இருக்கிறது.
தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசியினிடத்தில், "நீ ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், உன்னுடைய வழியில் ஒன்றுமே நிற்காது" என்று சொன்னார். அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவராய் அவர் இருந்தார். அவருடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாது. எத்தனை கோராக்கள் எழும்பினாலும், அல்லது எத்தனை தாத்தான்கள் எழும்பினாலும் அது ஒரு பொருட்டல்ல, அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவன் அழைத்ததோ வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்பவராகவே இருந்தது. அதுவே தேவனுடைய திட்டமும், அவருடைய பரிபூரண சித்தமுமாய் இருக்கிறது.
ஜனங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் நடக்கவில்லையென்றால், அவர் உங்களை நடக்க அனுமதிக்கும் ஒரு அனுமதிக்கும் சித்தத்தை உடையவராய் இருக்கிறார்.
இப்பொழுது, தேவன் நல்லவராகவே இருக்கிறார்…அவர் தன்னுடைய வார்த்தையை அனுப்புகிறார். நீங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிக்காவிட்டால், அதன்பின்னர் அவர் சபையில் ஐந்து வகையான உத்தியோகங்களை வைக்கிறார்: முதலாவது அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள், சுவிசேஷர்கள். அவர்கள் சபையின் சீர்பொருந்துதலுக்காகவே இருக்கிறார்கள்.
இவ்வாறு, காலங்களினூடாக ஜனங்கள் தேவனுடைய பரிபூரண திட்டமான: அவருடைய தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாததனால் மாத்திரமே இந்த ஊழியம் எழுப்பப்பட்டது. தேவனுடைய தீர்க்கதரிசி உரைத்த வார்த்தையை நாம் எளிமையாய் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்கோ வேறு யாரும் அல்லது வேறு எந்த காரியமும் தேவையே இல்லை.
அப்படியானால், ஒலிநாடாக்களோடு தரித்திருங்கள், ஏனென்றால் அதுவே தேவனுடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது: என்கிற அவருடைய பரிபூரண திட்டத்திற்கு ஜனங்களை திரும்ப கொண்டு வருவது ஊழியத்தின் பணியாக உள்ளது. அப்படியானால் அந்த பரிபூரண சித்த திட்டத்தை அவர்களுக்கு முன்பாக எல்லா நேரத்திலும் கடைப்பிடிக்க: இயங்கு பொத்தானை அழுத்துங்கள்.
நீங்கள் திரும்பி வந்து, நீங்கள் எங்கு துவங்கினீர்களோ, அல்லது நீங்கள் எங்கு விட்டீர்களோ அங்கிருந்து ஆரம்பித்து, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் எற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
மேய்ப்பர்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
தேவனுடைய தீர்க்கதரிசி கூட்டங்களுக்குச் சென்றபோது அவர் என்ன செய்தார்? வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவும், மற்றும் அது போன்ற காரியங்களுக்குமாகவா? அவர் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்துள்ளபடியினால், ஆடுகள் அதைக் கேட்கும் விதத்தில் அவர் ஒரு மறைமுகமான விதத்தில் காரியங்களைக் கூறுவார். இல்லாவிட்டால், அது தூண்டிலின் மீது இருந்த இரையாயிருந்தது. ஜனங்களை எழுச்சியுறச் செய்ய, அவர் பகுத்தறிதல் போன்ற அடையாளங்களை அவர்களுக்குக் காண்பித்து, அவர்களுடைய இருதயங்களின் இரகசியங்களை அறிந்துகொண்டார். ஆனால் அப்பொழுதும் மிக முக்கியமான காரியம் என்னவாக இருந்தது என்று அவர் கூறினார்:
முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஒலிநாடா அவர்களுடைய வீட்டிற்குள் அனுப்பப்படுகிறது. அப்பொழுது, அது சென்றடைந்துவிட்டது. அவன் ஒரு செம்மறியாடாயிருந்தால், அவன் அதனோடு சரிப்படுத்திக்கொள்ளுகிறான். அவன் ஒரு வெள்ளாடாக இருந்தால், அவன் அந்த ஒலி நாடாவை வெளியே உதைத்துத் தள்ளுகிறான்.
நீங்கள் ஒரு செம்மறியாடா அல்லது நீங்கள் ஒரு வெள்ளாடா? தேவனுடைய சிறிய குழு அந்த வார்த்தையை மையமாகக் கொண்டுள்ளது. இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருந்ததுபோல, அவருடைய மூல திட்டத்திலும் இருக்கிறோம்.
அவருடைய வார்த்தையுடன் சரியாக தரித்திருங்கள், ஏனென்றால் அதுவே முடிவில் வார்த்தையாக, வார்த்தைக்கு வார்த்தையாக வெளிப்படப்போகிறது. "யாராகிலும் தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒன்றை எடுத்துப் போட்டால், அல்லது அதனோடு ஒன்றைக் கூட்டினாலுமே!" அது அந்த வார்த்தையாகவே, தரித்திருக்க வேண்டும்.
நான் அவருடைய வார்த்தையின்படி அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறேன் என்பதை, ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலம், அறிந்துகொள்வதற்கு நான் கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். நான் அதற்கு என்னுடைய வியாக்கியானத்தையோ, அல்லது அதற்கு என்னுடைய புரிந்துகொள்ளுதலையோ சேர்த்துக்கொண்டிருக்கவில்லை, ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவதும், அவருடைய பரிபூரண சித்தமும் என்ன என்பதையே நான் என்னுடைய சொந்த செவிகளினால் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவன் தமது வார்த்தையைக் குறித்த தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா? 65-0418E என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், எங்களுடன் வந்து தியானிக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன். இந்தச் செய்தியில் பல நுணுக்கங்கள் உள்ளன, நாம் கேட்டு முடிக்கும்போது, நீங்கள் அவருடைய பரிசுத்த ஆவியில் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்கப் போகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
யாத்திராகமம் 19வது அதிகாரம்
எண்ணாகமம் 22:31
பரி. மத்தேயு 28:19
லூக்கா 17:30
வெளிப்படுத்தின விசேஷம் 17வது அதிகாரம்