ஞாயிறு
26 நவம்பர் 2023
63-0818
இணையும் நேரமும் அடையாளமும்

அன்புள்ள அவருடைய மாம்சத்தின் மாம்சமும், அவருடைய வார்த்தையின் வார்த்தையும், அவருடைய ஜீவனின் ஜீவனும், அவருடைய ஆவியின் ஆவியுமானவர்களே,

என்னுடைய விலையேறப்பெற்ற சகோதர சகோதரிகளே, அந்த ஒரு அறிக்கையை மீண்டும் மீண்டும் வாசியுங்கள். தேவன் தாமே உங்களை என்னவென்று அழைத்தார் என்பதை வாசியுங்கள். அப்படியிருக்க அது என்ன பொருள்படுகிறது என்பதை நமக்கு வெறும் மனித வார்த்தைகளால் எப்படி எவரேனும் எழுத முடியும். அது வெளிப்படுத்த இயலாததாயுள்ளது. நாம் நம்முடைய முழு இருதயங்களோடும், சிந்தனைகளோடும் மற்றும் ஆத்துமாக்களோடும் முழுமையாகப் புரிந்துகொண்டு அதைப் பயன்படுத்தினால், அப்பொழுது ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் உண்மையாகவே நிகழ வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன்.

பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? இதைக் குறித்து கவலைப்பட என்ன இருக்கிறது? சாத்தான் நம்மை எதிர்த்துப் போராடுகிறான், நம்மைத் துன்புறுத்துகிறான், சுகவீனங்களை நம்மீது போடுகிறான், ஒவ்வொரு விதமான தீய எண்ணங்களால் நம்முடைய மனங்களைத் தாக்குகிறான், ஆனால் நமக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது எதுவும் இல்லையே. இயேசுவுக்கு ஏதாவது தீங்கு செய்ய முடியுமா? இல்லையே, அப்படியானால் எதுவும் நமக்கும் தீங்கு செய்ய முடியாது. அவர்: நாம் அவருடைய மாம்சமும், அவருடைய வார்த்தையும், அவருடைய ஜீவனும், அவருடைய ஆவியுமாயிருக்கிறோம் என்று கூறினார்.

அவர் நமக்குச் சொல்லிக் கொண்டு வருகிறதை நாம் தியானிக்கும்போது நம்முடைய இருதயத்தில் எவ்வளவு மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கிறது. முழு நிறைவான ஒலிநாடாவில், தொடர்ந்து அடுத்தடுத்த முழு நிறைவான ஒலிநாடாவில், அதன்பின்னர் ஒவ்வொரு முழு நிறைவான ஒலிநாடாவிலும், வெளிப்படுத்தல்களை தேவன் நமக்கு வெளிப்படுத்தி வருகிறார். பரிசுத்த ஆவியானவர் ஒரு பெரிய ஆர்ட்டீசியன் ஊற்றைப் போல நமக்குள் பொங்கிக் கொண்டிருக்கிறார்.

அதைப் புரிந்துகொள்ளவும் கேட்கவும் நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நாம் விழமாட்டோம், விழுந்துபோகவும் முடியாது அல்லது தவறாகவும் வழிநடத்தப்படமாட்டோம். நம்முடைய தலைமைத்துவத்தை, நம்முடைய மீட்பரை, நம்முடைய கணவரை, நம்முடைய ராஜாவை, நம்முடைய கர்த்தரை, நம்முடைய நேசரை, நம்முடைய இரட்சகரை, அருளப்பட்டுள்ள சந்திக்கும் ஸ்தலத்தில் சந்திக்கும்படியாக நாம் நம்முடைய வழியில் இருக்கிறோம்.

இதை மீண்டும் கேளுங்கள்: இப்பொழுது தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக நமக்குள்ளே, அவருடைய சபையில் வாசம் செய்து, முதன்மையான ஸ்தானம் வகிக்கிறது. தேவனாயிருந்த எல்லாவற்றையும், அவர் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார்; கிறிஸ்துவாயிருந்த எல்லாவற்றையும், சபைக்குள்; நமக்குள், அவருடைய மணவாட்டிக்குள் ஊற்றிவிட்டார். இது எப்போதாவது என்றோ ஒரு நாளில் நடக்கப்போகிறது என்பதல்ல, அது இப்பொழுதே நமக்குள் நடந்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

ஆதிகாலம் முதற்கொண்டு, தேவன் தம்முடைய சிந்தையில் இருந்த மகத்தான மர்மமான ரகசியத்தை இந்நாள் வரை, ஒருவருக்கும் அளிக்கவேயில்லை என்பதை, உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா. அவர் ஏன் அப்படி செய்தார்? அவர் வாக்களித்தபடி இந்த கடைசி நாட்களில் அதை நமக்கு தெரியப்படுத்த அவர் காத்துக்கொண்டிருந்த காரணத்தினாலேயே. அவர் நமக்காக காத்துக்கொண்டிருந்தார். நாம் மாத்திரமே அதை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியும் என்றும், புரிந்து கொள்வோம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்…மகிமை!!!

நாம் விழமாட்டோம் என்பதை அவர் அறிந்திருந்ததால், அவருடைய மணவாட்டியாக இருக்கும்படிக்கு அவர் நம்மைத் தெரிந்துகொண்டார். முழு உலகமும் அதைக் குறித்து என்னக் கூறினாலும் நாம் அந்த வார்த்தையை பற்றிக்கொண்டிருப்போம். நாம் அந்த வார்த்தையை, அந்த வார்த்தையை மாத்திரமே பற்றிக்கொள்வோம்! நாம் அங்கே நிலைத்திருக்க முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவினால் புத்திரசுவிகாரராக்கப்பட்ட பிள்ளைகளாக இருக்கிறோம்.

இன்னமும் கூட இருக்கிறது. உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள்...உங்களை விழிப்புள்ளவர்களாக்கிக் கொள்ளுங்கள். தலைமைத்துவமும் (தேவன்) சரீரமும் (நாமும்) ஒன்றாக இணைந்துவிட்டன. இது தேவன் நமக்குள் வெளிப்படுத்தினதாயுள்ளது.

● தேவனும் அவருடைய சபையும் ஒன்று, "கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார்."
● நாம் தேவனுடைய மகத்தான வெளிப்பாடாக இருக்கிறோம்.
● நாம் அவருடைய நாமத்தைக் கூட தரித்துக்கொண்டிருக்கிறோம்; அவருடைய நாமம் இயேசு, அபிஷேகம்பண்ணப்பட்டவர்.
● நாம் கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்ப்பட்ட சரீரமாய் இருக்கிறோம்.
● அந்த சரீரம் செய்தது போலவே நாமும் தேவனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் அவருடைய மணவாட்டியாய், அவருடைய ஆவியால் கர்ப்பந்தரிக்கப்பட்டிருக்கிறோம். சபையானது, அவருடைய நாமத்தைக் கொண்டு அவருடைய ஆவியினால் கர்ப்பந்தரிக்கப்பட்டு, பிள்ளைகளைப் பிறப்பிக்கிறது; அவருடைய ஜீவனைப் பிறப்பிக்கிறது. நாம் சாத்தானுக்குரிய பதிலைப் பெற்றிருக்கிறோம். தலைமைத்துவம் இங்கே உள்ளது. கிறிஸ்து, உயிர்த்தெழுந்த கர்த்தர், அவர் எப்போதும் இருந்த தம்முடைய உயிர்த்தெழுதலின் அதே வல்லமையில் இங்கே இருந்துகொண்டு, அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தை மணவாட்டியான, நமக்குள் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தேவன் இப்பொழுது தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் உலகெங்கிலும் உள்ள அவர்களை தம்முடைய வார்த்தையின் மூலம் ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறார், அந்த ஒரே காரியமே நம்முடைய மணவாட்டியை ஒன்றாக இணைக்கும். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மணவாட்டியை வழிநடத்தி ஒன்றுகூட்டிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு காலத்திலும், தீர்க்கதரிசி அவர்களுடைய நாளுக்கான பரிசுத்த ஆவியாக இருந்தார்.

இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நாம் ஏழாம் தூதனாகிய செய்தியாளருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று ஜனங்கள் கூறும்போது, நினைவில் கொள்ளுங்கள், உலகத் தோற்றதிற்கு முன்பே கூட தேவன் தம்முடைய சிந்தையில் வைத்திருந்த தம்முடைய எல்லா ரகசியங்களையும் தம்முடைய ஏழாம் தூதனிடம் தேவன் தாமே ஒப்படைத்தார். தேவன் தாமே இந்த மனிதன் மீது 100% நம்பிக்கைக் கொண்டிருந்தார், அவர் தம்முடைய மகத்தான முடிவு-கால திட்டத்தை அவருடைய கரங்களில் வைத்தார். அவர் அவருக்குக் கொடுக்கிறார்…கவனியுங்கள், அவர் அந்த மனிதனுக்கு தம்முடைய எல்லா ரகசியங்களின் வெளிப்பாட்டையும் இவருக்கே அளிக்கிறார். எழுதப்பட்டிராத காரியங்களின் வெளிப்பாட்டையும் கூட அந்த மனிதனுக்குக் கொடுக்கிறார். பூமியில் அவர் என்ன சொன்னாலும் அது மிகவும் முக்கியமானது, அது பரலோகத்தில் எதிரொலிக்கும் என்று அவர் கூறினார்.

தேவன் இந்த உலகத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட மனிதர்களை அனுப்பினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தாலும், தவறாக இருக்கலாம். கர்த்தர் உரைக்கிறதாவது என்று அவர்கள் கூறுகிறதையும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படி உங்களுக்கு சொன்னதையும் தேவன் ஒருபோதும் ரூபகாரப்படுத்தவேயில்லை. அவருடைய ஏழாம் தூதனான செய்தியாளர் என்ற, ஒரு மனிதன் மாத்திரமே தேவனிடத்திலிருந்து அந்த அதிகாரத்தை பெற்றிருந்தவராய் இருந்தார்.

நீங்கள் ஒரு போதகரை உடையவராக இருக்கலாம், இருக்க வேண்டும். ஆனால் இதைத்தான் தீர்க்கதரிசி கூறினார் என்பதை மாத்திரமே அந்த போதகர் உங்களுக்கு சொல்லாமல், ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று அவர் உங்களுக்குச் சொல்லவில்லையென்றால், ஒலிநாடாக்களை உங்களோடு சேர்ந்து அவர் கேட்டு அதை உங்களுக்கு முன்பாக முதன்மைபடுத்தவில்லையென்றால், நீங்கள் தவறான போதகரைப் பெற்றுள்ளீர்கள்.

உங்களை வழிநடத்துபவர் யாராக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவர் என்று நீங்களும் கூட உரிமை கோரினாலும், “நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கிறேன்” என்று கூற முடிந்த ஒரே சத்தமாய் அது இருக்கிறபடியால், அந்த சத்தமே, இந்த செய்திக்கு உங்களை இணைப்பது சிறந்ததாகும்.

நீங்கள் அதைப் புரிந்துகொள்வதற்கு முன்குறிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் அதைப் புரிந்துகொள்வதற்கு முன் குறிக்கப்படவில்லையென்றால், நீங்கள் அதை ஒருபோதும் புரிந்துகொள்ளவே மாட்டீர்கள்; ஏனென்றால் அதைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் முன்குறிக்கப்பட்டிருக்கவில்லை.

நாடுகள் இணைவதை நாம் காண்கிறோம், உலகம் இணைவதை நாம் காண்கிறோம், சபைகள் இணைவதை நாம் காண்கிறோம். மணவாட்டி இணைவதை, வார்த்தையோடு இணைவதை நாம் காண்கிறோம். ஏன்? வார்த்தை தேவனாயுள்ளது. வார்த்தையானது…மணவாளன் (வார்த்தையாயிருக்கிறார்), மணவாட்டி (வார்த்தையைக் கேட்பவளாயிருக்கிறாள்), அவர்கள் ஒரு இணைப்பில் ஒன்று சேருகின்றனர். அவர்கள் ஒரு விவாகத்தைப் போல இணைகின்றனர். பாருங்கள், அவர்கள் ஒரு விவாகத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள்—அவர்கள் ஒருவராகின்றனர். வார்த்தை நீங்களாகிவிடுகிறது, நீங்கள் வார்த்தையாகிவிடுகிறீர்கள். இயேசு, “அந்த நாளிலே நீங்கள் அதை அறிவீர்கள். பிதா என்னவாகவெல்லாமாக இருக்கிறாரோ, அவை அனைத்தும் நானாக இருக்கிறேன்; நான் என்னவாகவெல்லாமாக இருக்கிறேனோ, அவையனைத்தும் நீங்களாக இருக்கிறீர்கள்; நீங்கள் என்னவாவெல்லாமாக இருக்கிறீர்களோ, அவையனைத்துமாக நான் இருக்கிறேன். நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார்.

இணையும் நேரமும் அடையாளமும் 63-0818 என்ற செய்தியை, நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தத்தின் பேரில் எங்களோடு இணைந்துகொள்ள வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

சங்கீதம் 86:1-11
பரி. மத்தேயு 16:1-3